நியூயார்க்: கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளான ஜாப்ராபாத், மெளஜ்பூர், பிரம்மபுரி, சீலாம்புரி, கோகுல்புரி, கஜோரி காஸ், பஜன்புரா பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் திடீர் வன்முறை வெடித்தது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பார்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் வாகனங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை சேதபடுத்தப்பட்டதுடன், தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன.இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா.சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டை காக்க வேண்டும். டெல்லியில் ஏற்பட்டுள்ள கலவரம் தொடர்பாக நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளதாக, அவர் கூறியுள்ளார்.