மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 4 நெல் மூட்டையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களே நெல் திருடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாகை மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டு, கடந்த 1 மாதமாக அறுவடை பணிகள் நடை பெற்று வருகிறது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டத்தில் 284 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பணியாற்றும் ஊழியர்களே திருடும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு 40 கிலோ எடையுள்ள மூட்டையிலிருந்தும் அலுவலர் முன்னிலையில் ஊழியர்கள் ஒரு அன்னக்கூடையால் நெல் அள்ளப்படும் காட்சிகள் உள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் சமூக வலைதளத்தில் வெளிவந்த காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோவால் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.