திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா துணைக் கமிஷனர் பிரதீப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காசர்கோட்டை சேர்ந்த அஸ்ரப், சிகாபுதீன், அப்துல் மெகரூப் ஆகியோர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனியாக அழைத்து தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பைகளில் ஏராளமான ஜீன்ஸ் பேன்ட்கள் இருந்தன. அவற்றின் பட்டன்களுக்கு பின்புறம் தங்கத்தை நூதன முறையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பேன்ட்களில் இருந்து தங்கம் பிரிக்கப்பட்டது. இதில்முக்கால் கிலோ தங்கம் பிடிபட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ₹40 லட்சம். விசாரணைக்கு பின் அதிகாரிகள் அவர்களை வலியத்துறை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.