டெல்லி: முதல்முறையாக 2 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் நேற்று இந்தியா வந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
அடுத்தப்படியாக, அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, ஆக்ரா விமான நிலையம் வந்த டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை 1 மணி நேரமாக பார்வையிட்டார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட டிரம்ப், டெல்லி புறப்பட்டார்.
2 வது நாளான இன்று குடியரசுத் தலைவர் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் தலைமையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், பல்வேறு நிறுவனங்களுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியது, கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சார்பில் அளிக்கப்படும் இரவு விருந்தில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய நபர்களை அதிபர் டிரம்பிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதற்குப்பின், குடியரசுத்தலைவர் அளித்த இரவு விருந்தில் உணவுகள் அருந்தி மகிழ்ந்தார். இதற்கிடையே, தனது இந்திய பணத்தை முடித்து கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் இரவு 10 மணியளவில் அமெரிக்கா திரும்புகின்றனர்.