சென்னை: அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்து அரசு அலுவலர்கள் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் விளக்க கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம், அனைத்து அரசுத் துறைகளையும் நவீனமாக்கியுள்ளது. பொதுமக்களுக்கான சான்றிதழ்கள், இ-சேவை மையம் மூலம், ஆன்லைனில் பதிவு செய்து வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், அரசு அலுவலக பணி மற்றும் இரு வேறு துறைகளுக்கு இடையே கடித போக்குவரத்து உள்ளிட்ட பணிகளையும், இணையதளம் மூலம் மேற்கொள்ளும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இ-ஆபீஸ் என்ற சாப்ட்வேர் உதவியுடன், அனைத்து வகை அரசு அலுவலக பணிகளும், காகித பயன்பாடு இல்லாமல், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல் போன் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அலுவலக பணியாளர் வருகைப் பதிவில் துவங்கி, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது வரை, அனைத்துப் பணிகளும், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த திட்டமானது, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரீட்சாத்த முறையில் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலர்களின் கூட்டமைப்பு முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர். இந்த நிலையில் அரசு அலுவலர்களின் கூட்டமைப்புக்கு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள விளக்க கடிதத்தில், புதிய நடைமுறையை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை எதிர் காலத்தில் சரி செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த செயல்முறையை கைவிடுவது அடுத்து வரும் திட்டங்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.