×

தாம்பரம் நகராட்சி இலவசமாக வழங்கியது செய்யூர் விவசாயிக்கு 16 டன் இயற்கை உரம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்காத குப்பை மூலம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறு பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, இயற்கை உரம் தயாரிக்க தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையம், மண்ணுரான் குளம், அம்மன் நகர், சேலையூர் அம்பேத்கர் நகர், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம், அருள் நகர், சேலையூர் சுடுகாடு ஆகிய பகுதிகளில் 7 நுண் உர செயலாக்க மையங்கள் மற்றும் 20 மிகச்சிறிய நுண் உர செயலாக்க மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில் 16 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உரத்தை செய்யூரை சேர்ந்த விவசாயி பாரி என்பவருக்கு தாம்பரம் நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் சிவக்குமார், ஜனார்த்தனன் முன்னிலையில் நேற்று இலவசமாக வழங்கினர்.இதுகுறித்து தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா கூறுகையில், “தாம்பரம் நகராட்சியில்  சேகரிக்கப்படும் குப்பைகளை நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே உரம் தேவைப்படுவோர் நகராட்சி அதிகாரிகளை அணுகலாம்” என தெரிவித்தார்.



Tags : municipality ,Tambaram ,Cheyyur ,Tambaram Municipality , Tambaram Municipality,Cheyyur farmer, fertilizer
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்