திருமலை: கீழ்திருப்பதியிலிருந்து திருமலைக்கு மோனோ, மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்த பின் முடிவு செய்யப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலையின் புனிதத்தன்மையை காப்பதோடு, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்திருந்தேன். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை கட்டுப்படுத்த மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கு முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதன் செலவு தொகை அதிகமாக உள்ளது.
இதனால் மாற்று ஏற்பாடாக மெட்ரோ, மோனோ ரயில்களை இயக்குவதா அல்லது சாலை மார்க்கத்தில் செல்லக்கூடிய டிராம் வாகனம் இயக்குவதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த 14ம் தேதி ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் என்.வி.எஸ் ரெட்டியை திருப்பதிக்கு வரவழைத்து தெரிவித்திருந்தேன். அவரதுஅறிக்கை வந்த பிறகு இது குறித்து பரிசீலித்து திருமலைக்கு எளிதாக செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.