பெங்களூரு: கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவாகியிருந்த 140க்கும் அதிகமான கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் நிழல் உலக தாதா ரவி பூஜாரி. தலைமறைவாக இருந்த இவரை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில போலீசார் தேடி வந்தனர். மேலும், வெளிநாட்டில் தங்கியிருந்தால் கைது செய்வதற்காக, இன்டர்போல் போலீசார் மூலமும் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், செனகல் நாட்டில் நேற்று முன்தினம் ரவி பூஜாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை அழைத்து வர பெங்களூரு போலீசார் அங்கு விரைந்தனர். அவரை நேற்று பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.