×

திருநம்பியை மணந்த இளம்பெண் பாதுகாப்புகோரி நீதிபதியிடம் மனு

மதுரை: திருநம்பியை திருமணம் செய்த இளம்பெண், பாதுகாப்பு கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், செட்டிபாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் விஸ்வந்த் (22). திருநம்பி. கோவையில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (21). சமூக ஆர்வலர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு ெசய்தனர். இதற்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஈரோடு மாகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு வந்தனர். அங்கு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி நீதிபதியிடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். பெற்றோர் எதிர்த்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். தக்க நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறியிருந்தனர். இதனையடுத்து, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றால், போலீஸ் கமிஷனரிடம் செல்ல வேண்டும் எனக்கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Young married, woman petition, protection
× RELATED வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்