சென்னை : பிஎஸ்6 ரக வாகனங்களுக்கான எரிபொருள் ஏப்ரல் முதல் கிடைக்கும். வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் தர தேவையில்லை என்று இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தபட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குனர் ஜெயதேவன் மற்றும் பொது மேலாளர் சிதம்பரம் அளித்த பேட்டி :
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 238 எல்பிஜி வாடிக்கையாளர்களில் இந்தியன் ஆயில் நிறுவனம் 136 லட்சம் வாடிக்கையாளர்களை ெகாண்டுள்ளது. எல்பிஜி வாடிக்கையாளர்களின வசதிக்காக இந்தியன் ஆயில் ஒன் என்ற ெசயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தற்போது 8 லட்சம் பேர் பயன்படுத்திவருகிறார்கள். வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 7588888824 என்ற எண்ணிற்கு REFIL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். பதிவு செய்த 24 மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தர வேண்டாம். சில்லரை பிரச்சனையை தவிர்க்க டிஜிட்டல் முறையில் பணத்தை வழங்கலாம்.
டிப்ஸ் கேட்கும் டெலிவரி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலிண்டர்களை வாங்கும்போது எடை சரியாக உள்ளதா என சரிபார்த்து வாடிக்கையாளர்கள் வாங்கவேண்டும். வீட்டு உபயோக சிலிண்டர்களை வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அவ்வபோது வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2318 எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளன. புதிதாக 2277 இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு 248 பேருக்கு விருப்ப கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறைகளில் தற்போது 5 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் இடங்களில் 12 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 22 நிலையங்கள் நிறுவப்படவுள்ளது. வீட்டு வாசலுக்கே எரிபொருள் விற்பனை செய்யும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கோவை, மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும்.
சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் ஐஐடி, என்ஐடி ஆகியவற்றில் சேருவதற்கு இந்தியன் ஆயில் விதூஷி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தபட்டுவருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்6 ரக வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சென்னையில் நான்கு இடங்களில் இ-கார்ஸ் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.