சென்னை: டெல்லி வந்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்க ஒப்புதலை பெற்றது என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்கு மாநிலத்தின் சார்பில் நன்றி தெரிவித்தேன். மேலும், கல்லூரிகள் தொடர்பான அனைத்து பணிகளும் விரைவில் துவக்கப்படும் என அவரிடம் உறுதி அளித்துள்ளேன்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளோம். இதைக் கேட்டு தெரிந்து கொண்ட அவர், மத்திய நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து உதவிகளும் தமிழகத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில் பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் திட்டமிட்டப்படி தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.