×

திருமண பத்திரிகையில் வைத்து போதை பொருள் கடத்தல்: பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

பெங்களூரு: திருமண பத்திரிகையில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த 5 கிலோ போதை பொருட்கள் பெங்களூர் விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. சுமார் 5 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர். போதைப் பொருள் கடத்தல் என்பது இன்றைக்கு மிகச் சாதரணமான ஒன்றாகிவிட்டது. குறிப்பிட்ட வயதுக்காரர்கள் தான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவார்கள் என்பதெல்லாம் கிடையாது, பள்ளிக் குழந்தைகள் கூட மிக எளிதாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். போதை பொருட்களை தடுக்க அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் தற்போது வரை கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. தொடர்ந்து, திருமண பத்திரிகையில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு விமான நிலைய சரக பிரிவில் இருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் பெருமளவில் போதை பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வெளிநாட்டுக்கு சரக பிரிவில் இருந்து கொரியர் மூலமாக அனுப்பவிருந்த பார்சல்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மதுரை முகவரியை கொண்ட பார்சல் ஒன்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது திருமண அழைப்பிதழ் நடுவே போதை மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிப்பட்டது. இதனை தொடர்ந்து, அதை பரிசோதித்த போது அவை எவர்டிரைன் என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. 43 திருமண அழைப்பிதழ்களில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருளை சுங்க இலாக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மேல் நடவடிக்கைக்காக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Bangalore Airport , Marriage magazine, narcotics, smuggling, Bangalore airport
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...