சென்னை: அதிகம் வருவாய் ஈட்டும் ‘சப்-டிவிசன்’களில் கூடுதல் கணக்கீட்டு அதிகாரிகளை நியமிக்க தமிழக மின்சாரவாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் தற்போது ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் மின்கணக்கீட்டு அதிகாரிகள் பணியிடமும் அடங்கும். இதனால் அவ்வப்போது கணக்கெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும் குறிப்பிட்ட காலத்தில் மின்கட்டணத்தை செலுத்தாதவர்களின் இணைப்பை, உடனடியாக துண்டிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதை தடுக்கும் வகையில் புதிதாக ஊழியர்களை நியமிக்க மின்சார வாரியம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்ஒருபகுதியாக, அதிக வருவாய் ஈட்டக்கூடிய ‘சப்-டிவிசன்’களில் கணக்கீட்டு அதிகாரி பணியிடங்களை கூடுதலாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ‘சப்-டிவிசன்’களில் இருந்தும் தனித்தனியாக விவரம் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் ஈட்டக்கூடிய வருவாய், கூடுதல் பணியாளர்கள் தேவை விவரம் போன்றவற்றை சேகரித்து அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.