×

சீரடி எக்ஸ்பிரஸ் இன்ஜின் கழன்று பெட்டிகள் ஓடியது: பயணிகள் அலறல்

திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவில் இருந்து மகாராஷ்டிர மாநிலம், சீரடிக்கு நேற்று சீரடி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் விஜயவாடா அஜித்சிங் நகரில் மெதுவாக சென்றபோது திடீரென இன்ஜினை விட்டு ரயில் பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் சுதாரித்துக்கொண்ட இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே ரயில்பெட்டிகள் மட்டும் தனியாக செல்வதை அறிந்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

தகவலறிந்த விஜயவாடா ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணிநேரத்தில் இன்ஜினுடன் பெட்டிகளை இணைத்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த ரயில் பெட்டிகள் கழன்றதாகவும் இனி அதுபோன்று நடைபெறாது எனவும் பக்தர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து சீரடிக்கு ரயிலை அனுப்பி வைத்தனர். ரயில் மெதுவாக சென்றதால் அதிகபட்சம் பெரிய அளவில் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Regular Express, Engine, Boxes, Passengers
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு...