துரைப்பாக்கம்: திருவான்மியூர், லட்சுமிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (70). இவர், நேற்று வீட்டின் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகத்தில் வந்த கார், இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தினம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள கார் எண்ணை வைத்து டிரைவரை தேடி வருகின்றனர்.