×

இதுவரை இல்லாத அளவுக்கு கடும் உயர்வு தங்கம் கிராம் ரூ.4000 தாண்டியது

* சவரன் ₹32 ஆயிரத்தை எட்டியது
* நடுத்தர மக்கள் கலக்கம்

சென்னை: வரலாற்றில் முதல் முறையாக தங்கம் சவரன் நேற்று ₹32,408க்கு விற்பனையானது. கிராம் ₹4 ஆயிரத்தை கடந்தது. வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது. தங்கம் விலையில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டது.புத்தாண்டு தினத்தன்று சவரன் ₹29,880க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி சவரனுக்கு ₹632 அதிகரித்து ஒரு சவரன் ₹30,520க்கும் விற்கப்பட்டது. இந்த விலை உயர்வு என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ₹31,216க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி ஒரு சவரன் ₹31,408, 19ம் தேதி ₹31,720க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ₹3,978க்கும், சவரன் ₹31,824க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹71 அதிகரித்து ஒரு கிராம் ₹4,051க்கும், சவரனுக்கு ₹584 அதிகரித்து சவரன் ₹32,408க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை கிராம் ₹4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. . இதற்கு முன்னர் இருந்த விலை உயர்வு சாதனை அனைத்தையும் நேற்றைய விலை முறியடித்துள்ளது. நேற்று காலையில் சவரன் ₹32,096க்கு விற்கப்பட்டது. இது மாலையில் மேலும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் மட்டும் சவரன் ₹1,192 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கலக்கமடைய செய்துள்ளது. இந்த விலை உயர்வால் அவர்கள் பட்ஜெட்டில் கூடுதல் பணம் ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படியிருக்கையில் இன்னும் விலை உயரத்தான் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவலை நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பல  நாடுகளில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதனால் உற்பத்தி துறையை சார்ந்த பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். அதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இரண்டாவதாக, இந்த ஆண்டு இறுதியில் அதாவது, நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

அதுவரை அமெரிக்காவில் பங்கு சந்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. அதனால், அங்குள்ள முதலீட்டாளர்களும், தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்றாவதாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், தொடர்ந்து உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இனிமேலும் விலை உயரும். விலை உயர்ந்த போதிலும் வியாபாரம் என்பது பாதிக்கப்படவில்லை. வழக்கம் போல் தான் வியாபாரம் நடந்து வருகிறது. தங்கம் விலை உயர்வால் ஏற்கனவே, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால், அவர்கள் இன்னும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். நேற்றைய விலை தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை உயர்வாக இருந்தது. அந்த விலையை ₹32,408(நேற்றைய) விலையை முறியடித்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயர தான் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Gold , soared , all-time high , Rs 4,000
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...