பாட்னா: ‘‘சுதந்திரம் பெற்ற போதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பாதது, நம் முன்னோர்களின் தவறு. அதற்கான விலையை இந்தியா தற்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது,’’ என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் சிஏஏ-வுக்கு ஆதரவாக பீகார் மாநிலம், சீமாஞ்சல பகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:ஆங்கிலேர்களிடம் இருந்து சுதந்திரம் பெற நமது முன்னோர்கள் போராடிய போதே, முஸ்லிம் நாட்டை உருவாக்க ஜின்னா வலியுறுத்தினார். அப்போது நமது முன்னோர்கள் தவறு செய்து விட்டனர். அப்போதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி, இந்துக்களை இந்தியா கொண்டு வந்திருந்தால் சிஏஏ பிரச்னை எழுந்திருக்காது. இது நடக்காததால், அதற்கான மிகப் பெரிய விலையை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற சர்ச்சை கருத்துக்களை கிரிராஜ் சிங் அடிக்கடி கூறி வருகிறார். தற்போது அவர் கூறியுள்ள கருத்தால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. ேலாக் ஜனசக்தி கட்சி தலைவர்கள் சிராக் பஸ்வான் கூறுகையில், ‘‘நாங்கள் தே.ஜ கூட்டணியில் உள்ளோம். ஆனால், பல நேரங்களில் எங்கள் கூட்டணி கட்சியினர், நாங்கள் ஒப்புக் கொள்ளாத கருத்தை தெரிவிக்கின்றனர். இதற்கு கிரிராஜ் சிங் பேச்சு ஒரு உதாரணம். இது போல் எனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்,’’ என்றார்.