×

தரமற்ற தார்சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது உ.செல்லூர் கிராமம். இந்த கிராமத்திற்கு உ.நெமிலியில் இருந்து உ.செல்லூர் கிராமம் வரையிலான வயல்வெளிச் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக தார் சாலை போடும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.

நேற்று தார் சாலை போடும் பணியின்போது அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அங்கு சென்றனர். சாலை போட்ட சில நிமிடத்திலேயே சாலை முற்றிலும் பெயர்ந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டவர்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு சாலை போடும் பணி நிறுத்தப்பட்டது.

இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 15 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து அதன்பின் போடப்படும் இந்த தார் சாலையை தரமானதாக போட வேண்டும் என்றும், அப்படி தரமான சாலையாக போடவில்லை எனில் சாலை போடும் பணியினை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு தார் சாலை போடுவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் தரமான சாலை போட வேண்டும் என உ.செல்லூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Civilians , Ulundurpettai
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை