×

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரேத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. இதற்காக பூந்தமல்லி  அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைத்து  படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராட்சத கிரேன் மூலம்  முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது கிரேன் அறுந்து விழுந்ததில் ஷங்கரின் உதவி  இயக்குனர் கிருஷ்ணன், புரொடக்‌ஷன் உதவியாளர் மது, கலை உதவி இயக்குனர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை  உடனடியாக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவர்களுக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியானவர்களின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது


பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு, மற்றும் பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களை தவறாக கையாண்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியிருந்த   ராஜனை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் வைத்து கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Crane operator ,Rajan ,crane crash ,India , Crane Operator, Rajan, Arrested, Indian-II
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு