×

இரும்புலியூர் மேம்பாலத்தில் கனரக லாரி கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து நெரிசல்

தாம்பரம்: தாம்பரம் அருகே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம், ஆரப்பாக்கத்தில் இருந்து நேற்று காலை எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 7:30 மணி அளவில் பெருங்களத்தூர் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் லாரி சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலை நடுவே கவிழ்ந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வண்டலூர், பெருங்களத்தூர் மார்க்கமாக தாம்பரம், மதுரவாயல் நோக்கி சென்ற வாகனங்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நெரிசலில் திணறின. தகவலறிந்த தாம்பரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து பணிகளை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் கிரேன் இயந்திரம் மூலம் சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags : bridge ,Imbuliyur ,truck crashes , Heavy truck crashes ,Imbuliyur bridge
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!