கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் கூறிய இளம்பெண்ணின் சகோதரன் தாக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ இதில் முகாந்திரம் இல்லை என நிராகரித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதுதொடர்பான வழக்கு நேற்று கோவை தலைமை குற்றவியல் நீதிபதி ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அப்போது புகார் தெரிவித்த இளம்பெண்ணின் சகோதரன் தரப்பில் சி.பி.ஐ. அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.