பாலியா: உபி.யின் பைரியா தொகுதி பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங். இவரது மகன் ஹசாரி சிங். இவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து, அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரி ரதேஷ்யாம் ராமை அவதூறாக பேசியதுடன், அவரை இழுத்து கீழே தள்ளி தாக்கியும் உள்ளனர். இது தொடர்பாக ரதேஷ்யாம் ராம் அளித்த புகாரின் பேரில், ஹசாரி சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் உளள பாஜ எம்எல்ஏ.க்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே, உன்னாவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பாஜ எம்எல்ஏ. குல்தீப் செங்காரின் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், விதவைப் பெண்ணை ஓட்டலில் ஒரு மாதமாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் பாஜ எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மற்றொரு எம்எல்ஏ.வின் மகன் அட்டகாசம் செய்து சிக்கியுள்ளார்.