×

கழிவறையில் செல்போனில் வைத்து ஆபாச படம் எடுத்த விவகாரம்: வீடியோ காட்டி மாணவிகளை பலாத்காரம் செய்தாரா?

* ஐஐடி இணை பேராசிரியரிடம்  தீவிர விசாரணை
* செல்போன், லேப்டாப் தடயவியல் துறைக்கு அனுப்பி சோதனை

சென்னை: கழிவறையில் எடுத்த வீடியோக்களை வைத்து சென்னை ஐஐடி இணை பேராசிரியர், மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்புகளை தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் தனித்தனி விடுதிகள் உள்ளது. அதேபோல் துறை ரீதியாக ஆய்வு கூடங்களும் உள்ளது.இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு, ஏரோ ஸ்பேஸ் ஆய்வகத்தில் மாணவர்கள் செய்முறை தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாணவி ஒருவர் ஆய்வகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு, ஆடைகளை கழற்றிய போது, அறையின் சூழல் அவருக்கு அசாதாரணமாக தெரிந்தது.

சந்தேகமடைந்த அவர், அறையை சுற்றி பார்த்தபோது, அருகில் உள்ள கழிவறையின் தண்ணீர் குழாய் துளைவழியாக செல்போன் மூலம் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.சத்தம் கேட்டு ஆய்வகத்தில் இருந்த சக மாணவிகள் மற்றும் மாணவர்கள் ஓடி வந்து, அருகில் உள்ள கழிவறையில் இருந்த நபர் யார் என்று பார்த்தனர். அவர், ஏரோ ஸ்பேஸ் துறையின் இணை பேராசிரியரான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் பானர்ஜி (25) செல்போனுடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  பின்னர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுபம் பானர்ஜியை பிடித்து விசாரித்தனர். குற்றம் செய்ததை அவர் ஒப்பு கொண்டார். மேலும் விசாரணையில், கடந்த 3 மாதங்களாக பல மாணவிகளை கழிவறையில் வீடியோ எடுத்ததும் தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, சுபம் பானர்ஜி மீது ஐபிசி 354சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவரது அறையில் போலீசார் சோதனை நடத்தி செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சுபம் பானர்ஜி, நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இருந்தாலும் வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கழிவறையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? எத்தனை மாணவிகளை வீடியோ எடுத்துள்ளார்? இதுகுறித்து அந்த மாணவிகளுக்கு தெரியுமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகுதான், பாதிக்கப்பட்ட மாணவிகள் எத்தனை பேர் என்பது குறித்து முழுவிவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக, ஐஐடி நிர்வாகம் சார்பில் விசாரணை குழு அமைத்து தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்றும் ஐஐடி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : video student , Toilet, porn movie, students, rape
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை