×

நடுரோட்டில் தீக்குளித்த டீக்கடைக்காரர்: விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த வளவனூரை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (45). புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை வைத்துள்ளார். இவருடன் பிறந்த சகோதரிகள் 4 பேர். இதில் மூத்த சகோதரி மும்தாஜ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது தாயார் பாத்திமா அப்துல் ரசாக் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அப்துல் ரசாக் வசித்துவரும் 3 சென்ட் இடத்திற்கு அவரது தந்தை இப்ராகிம் ஜீவனாம்சம் எழுதி கொடுத்துள்ளார். தற்போது அப்துல் ரசாக் அந்த இடத்தை குடும்ப சூழ்நிலை காரணமாக விற்பதற்காக முயற்சி செய்து வந்தார். இதற்கு அவரது மூத்த சகோதரியான மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று காலை 11 மணியளவில் அப்துல் ரசாக் தனது தாயாருடன் இடத்தை விற்பது பற்றி பேசி வந்துள்ளார். இதைக்கேட்ட அவரது சகோதரி மும்தாஜ் இடத்தை விற்பதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அப்துல் ரசாக் தனது கடைக்கு சென்று அங்கு இருந்த மண்ணெண்ணையை தனது மேல் ஊற்றிக் கொண்டு, மும்தாஜ் வீட்டு முன்பு தீவைத்துக்கொண்டார். இதில் அப்துல் ரசாக் உடல் முழுவதும் தீ பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, பக்கத்தில் இருந்த வாழை மரங்களை வெட்டி வாழைச்சாற்றை உடலில் ஊற்றி முதலுதவி சிகிச்சை செய்தனர்.

உடல் முழுவதும் தீ பரவியதால் 60 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த, வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Villupuram ,road , The fire-dealer, Villupuram
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...