×

திருப்பூர் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 48 பயணிகளுடன் கேரள அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அவிநாசி அருகே வந்த போது, கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்தது, மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் துடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமது அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலையறிந்து மிகுந்த துயரமடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.


Tags : bus accident ,Modi ,families ,victims ,Tirupur , Tirupur, bus accident, condolences, PM Modi, tweet
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...