×

ராணிப்பேட்டை - பொன்னை நெடுஞ்சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பொன்னை நெடுஞ்சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக அதன் அருகில் உள்ள ராணிப்பேட்டை - பொன்னை நெடுஞ்சாலைக்கு வந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் இரண்டு நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடந்து செல்வோர் என அனைவரும் பெரிதும் சிரமத்துடன் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையில் ஓடும் கழிவுநீரில் கழிவறையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் கலந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடும், கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது பல ஊர்களில் மர்ம நோய்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Ranipetta - Ponnai , Ranipetta , Ponnai, Highway
× RELATED யானை தாக்கி விவசாயி பலி