டெல்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் திமுக கோரியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களில் இருக்கட்டங்களாக 27 மாவட்டங்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கு விரைவிலே இந்த உள்ளாட்சி தேர்தலானது நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருந்த தருணத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வெகுவிரைவில் நடத்த கூறி திமுக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
உடனடியாக இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஒரு இடைக்கால மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக சார்பில் இந்த மனுவை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் முறையிடவும் தற்போது திமுக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் அந்த மனுக்களுடன் சேர்த்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.