×

முறைகேடு புகார் எதிரொலி தொல்லியல் அலுவலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை : தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது), 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு ஆகிய 2 தேர்வுகளிலும் இடைத்தரகர் மூலமாக மிகப்பெரிய முறைகேடு நடந்தது  தெரியவந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி, இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடியிடம் ஆவணங்களை ஒப்படைத்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு மூலமாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் கைது செய்யப்பட்டு  வருகின்றனர். மேலும் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் நடந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  முறைகேட்டை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் 3 மையங்களில் நடைபெறுவதாக இருந்த தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை : தேர்வாணையத்தால் தமிழ்நாடு  பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய  18 தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 தேர்வு மையங்களில் வரும் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  தற்போது இந்த தேர்வு சென்னையில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இத்தேர்வுக்கு சென்னை நீங்கலாக இதர மையங்களை தேர்வு செய்திருந்த விண்ணப்பதாரர்களுக்கு இதுகுறித்த குறுஞ்ெசய்தி மற்றும் மின்னஞ்சல்  வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Officer Examination ,DNBSC ,Chennai ,announcement , complaint ,abuse, Archeology officer,Chennai, DNBSC announcement
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு