புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அரசு ஒப்பந்ததாரரான அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரை அடுத்த போரம் கிராமத்தில் வசிப்பவர் ரெங்கசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக பெருங்களூரில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டும், அந்த வணிக வளாகத்தில் உள்ள வீட்டில் குடியிருந்தும் வருகிறார்.
இவரது மனைவி காந்திமதி. அதிமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். ரெங்கசாமி பெருங்களூர் கூட்டுறவு சங்க இயக்குனராகவும், அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருமநாதர் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ரெங்கசாமி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நேற்று காலை வரை நடந்தது. விசாரணையின் போது ரெங்கசாமி நேரில் ஆஜராகும்படி வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றதாகவும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.