×

டோக்கியோ ஒலிம்பிக்சுக்கு தயார்...பி.வி.சிந்து உற்சாகம்

சென்னை: ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தீவிரமாகத் தயாராகி வருவதாக பேட்மின்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து தெரிவித்தார். சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள ஓமேகா பள்ளியில்  பி.வி.சிந்து பேட்மின்டன் அகடமி மற்றும் பேட்மின்டன் விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பி.வி.சிந்து அகடமி மற்றும் விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் கட்டுமானப் பணிகளுக்காக 5 லட்ச ரூபாய் நன்கொடையும் அளித்தார். இந்த விளையாட்டு அரங்கை அமைக்கும் ஹார்ட்ஃபுல்னஸ் அமைப்பின் நிர்வாகி கம்லேஷ் படேல், ‘ இந்த விளையாட்டு அரங்கில் சுமார் 1000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை ரசிக்கலாம். மொத்தம் 8 பேட்மின்டன் களங்களுடன்,  உடற்பயிற்சி மையம், தியானம், யோகா பயிற்சி மையங்களும் அமைக்கப்படும். ஓமேகா பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி ஆர்வமுள்ள யாரும் இங்கு பயிற்சி பெறலாம்.’ என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிந்து கூறியதாவது: ஒலிம்பிக் போட்டிக்காகத் தீவிரமாக தயாராகி வருகிறேன். குறிப்பாக தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். சிறிய தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு பயிற்சி பெறுகிறேன். அதற்கு உடல்திறன் மேம்படுத்துவதுடன், மனதை ஒருமுகப்படுத்தவும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கடந்த 9 மாதங்களாக தியானப் பயிற்சி மேற்கொள்கிறேன். அது மனதை ஒருமுகப்படுத்தி உணர்ச்சி வசப்படாமல் தவறுகளை குறைக்க உதவி வருகிறது.வெல்ல முடியாத வீராங்கனைகள் என்று யாரும் கிடையாது. யாரும் யாரையும் வெல்ல முடியும். அப்படி நீங்கள் குறிப்பிடும் வீராங்கனைகள் உலக சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன். வெல்ல முடியாதவர் என்று யாருமில்லை. வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆனால் ஆடும்போது அனுபவித்து, முழுமனதுடன் விளையாட வேண்டும். என்ன தவறு செய்கிறோம் என்பதில் தெளிவு  வேண்டும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் ஒவ்வொருவருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கு இருப்பது இயல்பானது. பிரசேிலில் நடந்த 2016 ஒலிம்பிக் போட்டியின் போதும் வென்றாக வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. இந்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமின்றி, மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.  ரசிகர்கள் காட்டும் அன்பும் , ஆதரவையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளும் இரண்டரை  முதல் 3 மணி நேரம் தனிப்பட்ட பயிற்சியாளரின் கண்காணிப்பில்  பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக விரைவில் இந்தோனேசியாவை சேர்ந்தவர் எனது பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு சிந்து கூறினார்.


Tags : Tokyo Olympics ,PV sindu , Tokyo Olympics, PV sindu
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...