தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு பிப்.22ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் சிவந்தி ஆதித்தன் மணி மண்டப திறப்பு விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவியை வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கிறார். மேலும், அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அக்கருவியை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேற்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிடங்களை பார்வையிட்டார். நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, எஸ்பி அருண் பாலகோபாலன், டவுன் டிஎஸ்பி பிரகாஷ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி மருத்துவ அதிகாரி ஜெயபாண்டி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் வீரபாண்டியன்பட்டினத்தில் விழா நடக்கும் இடம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.