×

வாய்த்தகராறில் விபரீதம் மாமியாரை கொன்ற மருமகள் கைது : ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்:  ஆதம்பாக்கம் கணேஷ்நகரை சேர்ந்தவர் சரவணன்.  இவரது மனைவி   சரஸ்வதி (48). மகன் மற்றும் தனது தாயார் சுலோச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.  இதில் சரஸ்வதி மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ  சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த  சரவணன்  கதவை  தட்டியபோது யாரும் திறக்காததால்   கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றபோது சரஸ்வதி பேய் அறைந்தது போல் காணப்பட்டார்.

மற்றொரு அறையில், சுலோச்சனா இடது கண், நெற்றிப்புருவம் ஆகிய  பகுதிகளில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார்,  சுலோச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். விசாரணையில்,  சுலோச்சனாவுக்கும், சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரஸ்வதி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, மாமியாரை குத்தியதில் அவர் இறந்தது தெரிந்தது. போலீசார் சரஸ்வதியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* புழல் கதிர்வேடு பாரதியார் தெருவை சேர்ந்த ஜான் கெல்வின் (32) என்பவர், தனது பைக் திருடுபோனதால், மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* கோயம்பேடு பி.எச். சாலையை சேர்ந்த ஏழுமலை (41) என்பவர், தனது காரை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தி இருந்த போது, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* புளியந்தோப்பு, காந்தி நகரில் மாவா மற்றும் மதுபானங்களை வீட்டில் பதுக்கி விற்ற சுதா (30) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 20 மது பாட்டில்கள் மற்றும் ஒரு கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.
* தண்டையார்பேட்டை 2வது தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவரின் 3 எருமை மாடுகளை திருடிய வியாசர்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் ெதாடர்புடைய அனு, தர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
* வாணுவம்பேட்டை, வேம்புலியம்மன் கோயில் குறுக்கு தெருவை சேர்ந்த விஜயகுமார் (19) என்பவரை முன்விரோத தகராறில் சரமாரி தாக்கி, அவரது ஆட்டோவை கத்தியால் கிழித்து சேதப்படுத்திய வழக்கில் திருவல்லிக்கேணியை சேர்ந்த தீபன் (21), சிஐடி நகரை சேர்ந்த ஆனந்தன் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சக ஆட்டோ டிரைவர் பிரபாகரன் (27) என்பவரை தேடி வருகின்றனர்.
* பீர்க்கன்காரணை, வேல் நகர், 4வது தெருவை சேர்ந்த சந்தியா (20), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், சந்தியாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
* எருக்கஞ்சேரி சூர்பங்கரை நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஹரி (35), நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர், இவரை தாக்கி விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.
* ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்கு வந்து, இரவு தங்கிய திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பனையூரை சேர்ந்த முருகன் என்பவரின் செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
* லிட்டில் மவுன்ட் பகுதியை சேர்ந்த சுமி மேத்யூ (49), நுங்கம்பாக்கம் சாலையோரம் நின்று, கால் டாக்சி புக் செய்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரது செல்போனை பறித்து சென்றனர்.
* தேனாம்பேட்டை நெடுஞ்சாலையில் கணவர் ராஜ்குமாருடன் பைக்கில் சென்ற மகள் என்பவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை, மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
* புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (20), எழும்பூர் அருங்காட்சியகம் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரது செல்போனை பறித்து சென்றனர்.
* பழவந்தாங்கல் ரகுபதி நகரை சேர்ந்த தனலட்சுமி (80), வீட்டில் தனியாக இருந்தபோது, மது போதையில் அங்கு வந்து அத்துமீறலில் ஈடுபட்ட அதே தெருவை சேர்ந்த தினேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : mother-in-law , Woman arrested , killing her mother-in-law
× RELATED வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை...