×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு துணை ஆணையர் நியமனம்: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை ஆணையராக ஜெயப்பிரியாவை நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் ஜோதி லட்சுமி (துணை ஆணையர் பொறுப்பு) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, கடந்த 2016ல் கோயில் உண்டியல் பணம் ₹37 லட்சம் மாற்றாமல் விட்டார்.இந்த புகாரின் பேரில் அவர் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், கந்தகோட்டம் முருகன் கோயில்  10 வெள்ளி காசுகளை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறி அவருக்கு ஓராண்டு பதவி உயர்வு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. விழாவில் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பேரில், கடந்த ஜனவரி 13ம் தேதி ஈரோடு உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக இணை ஆணையர் காவேரியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தற்போது, சென்னை சட்ட சேர்மம் உதவி ஆணையர் ஜெயப்பிரியாவை திருவல்லிக்கேணி துணை ஆணையர் பொறுப்புக்கு பணியிட மாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
திருவல்லிக்கேணி துணை ஆணையர் பணியிடத்திற்கு முழு பொறுப்பில் ஜெயப்பிரியாவை நியமித்து ஆணையிடப்படுகிறது. தற்போது கோயில் பொறுப்பை கவனித்து வரும் இணை ஆணையர் காவேரி அனைத்து பொறுப்புகளையும் உடனடியாக விடுவிக்க ஆணையிடப்படுகிறது. பொறுப்பு ஒப்படைத்து ஏற்றமைக்கு பொறுப்பு மாற்று சான்று மற்றும் பொறுப்பு பட்டியல் ஆகியவற்றை தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மேற்கண்ட அலுவலர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deputy Commissioner ,Commander ,Pajendra Reddy ,Tiruvallikeni Parthasarathy Temple , Triplicane, Parthasarathy , Commissioner,Pajendra Reddy
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...