×

குஜராத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத கட்ச் வளைகுடாவில் சேட்டிலைட் போன் பாக். தீவிரவாதிகள் ஊடுருவலா?

புஜ்: குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் சேட்டிலைட் போன் கண்டெடுத்த மீனவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடா பகுதிக்கு  கடந்த 3ம் தேதி மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர் கான்ட்லா துறைமுகம் அருகே கிடந்த போன் ஒன்றை கண்டெடுத்தார். திரும்பி வந்த மீனவர் அந்த போனை எடுத்து சென்று அதற்கு சிம் கார்டு வழங்குமாறு செல்போன் கடையில் கேட்டுள்ளார். அதை பார்த்த கடைக்காரர் இது சாதாரண போன் அல்ல செயற்கைக்கோள் போன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த கட்ச் கிழக்கு பகுதி போலீசார் மீனவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தீவில் மீன்வலையை உலர வைக்க சென்றபோது அந்த போன் கிடைத்ததாகவும், அந்த செயற்கைக்கோள் போன் செயல்பாட்டில் இல்லை என்பதும் தெரியவந்தது.

அதில் உள்ள ஐஎம்இஐ எண்ணை கொண்டு அந்த போனில் பதிவாகியுள்ள அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கட்ச் கிழக்கு பகுதி போலீஸ் எஸ்பி பரிக்‌ஷிதா ரதோட் தெரிவித்துள்ளார். சமீப காலமாக, கட்ச் வளைகுடா வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்று வருகின்றனர். இதைத் தடுக்க தீவிர கண்காணி ப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் யாராவது இப்பகுதிக்கு வந்து இந்த செயற்கைக்கோள் போனை பயன்படுத்தி விட்டு, வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Tags : Gujarat ,terrorists ,extremists , Gujarat, Kutch Gulf and Pakistan militants
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்