×

சேலம் ஜங்ஷனில் பரபரப்பு கோவை- பெங்களூரு ஈரடுக்கு ரயிலில் திடீர் தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சேலம்: கோவையில் இருந்து பெங்களூருக்கு தினமும்  உதய் ஈரடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22666) இயக்கப்பட்டு வருகிறது. சேலம் வழியே செல்லும் இந்த ரயில் இன்று காலை 8 மணியளவில் சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே யார்டு பகுதியை கடந்து வந்தது.
5வது பிளார்ட்பாமில் நிறுத்துவதற்காக ரயில் சென்ற நிலையில் லோகோ பைலட் பிரேக் பிடித்துள்ளார். அப்போது டி5 பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறிகள் பறந்த நிலையில் கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அலறினர். பிரேக் பெயிலியர்  பிரச்னையால் ஆக்ஸில் ஆயிலில் தீப்பிடித்தது. இதனால் உடனடியாக ரயிலை லோகோ பயிலட் நிறுத்தினார். ரயில் நின்றதும் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். உடனே அந்த இடத்திற்கு லோகோ பைலட் மற்றும் ஜங்ஷன் ரயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

அவர்கள் பரிசோதித்ததில் பிரேக் பயிண்டிங் பிரச்னை காரணமாக சக்கரம் தண்டவாளத்தில் உரசியதில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது தெரியவந்தது. உடனடியாக கோட்ட பொறியாளர் பிரிவு  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து வந்த ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சரிசெய்யும் பணி நடந்தது. இதன்பின் காலை 9.40 மணிக்கு  டி5 பெட்டி  சக்கரம் மற்றும் பிரேக் பகுதிகள் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து பெங்களூருக்கு அந்த ரயில்புறப்பட்டுச்சென்றது.  தீப்பிடித்ததை கவனித்து உடனடியாக ரயிலை நிறுத்தி சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் லோகோ  பைலட்டை அதிகாரிகள் பாராட்டினர்.

Tags : junction ,Salem junction Salem , Salem, Coimbatore - Bengaluru Railway
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...