×

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் குடிசைவாசிகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ள அகமதாபாத் நகராட்சி நிர்வாகம்: 7 நாட்கள் கெடு!

குஜராத்: குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை எதிரொலியாக அகமதாபாத்தின் மோடேரா பகுதி குடிசைவாசிகள் 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக, அகமதாபாத்தின் மோடேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை பிரதம் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இணைந்து தொடங்கி வைக்கின்றனர்.

அமெரிக்க அதிபரான பிறகு, அவர் இந்தியா வருவதே இதுவே முதல் முறை. எனவே, அவருடைய வருகையை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மோடேரா பகுதியில் உள்ள குடிசைவாசிகள் 7 நாட்களுக்குள் அப்பகுதியை காலி செய்யுமாறு அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்பகுதியில் உள்ள 45 குடும்பங்களுக்கும் இந்த நோட்டீஸானது அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பேசிய குடிசைவாசி ஒருவர், நாங்கள் இங்கு இரண்டு தசாப்தங்களாக வசித்து வருகிறோம். ஆனால், நமஸ்தே டிரம்ப் நிகழ்வின் காரணமாக எங்களை வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளனர், என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், அப்பகுதியை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதற்கும் டிரம்பின் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அகமதாபாத் நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இவ்விகாரம் குறித்து பேசிய கட்டுமானத் தொழிலாளராக பணிபுரியும் குடிசைவாசிகளில் ஒருவர், நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகள் தங்களிடம், அப்பகுதியை விரைவில் காலி செய்ய சொன்னதாகவும், அமெரிக்க அதிபர் மோடேரோ மைதானத்திற்கு வருவதால் நாங்கள் வெளியேற வேண்டும் என அவர்கள் கூறினார்கள், எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சாபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப்பகுதிகளின் எதிரில் 7 அடிக்கு சுவர் ஒன்று எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Donald Trump ,administration ,Ahmedabad ,slum dwellers ,visit ,US ,slum ,families ,Gujarat , President Trump, Gujarat, Motera, slum dwellers, Ahmedabad, municipality
× RELATED அதிபருக்கான வேட்பாளர் தேர்வு : நிக்கி ஹாலே விலகல்