×

2015 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை கோரி திமுக மனு தாக்கல் செய்ய அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015ல் நடத்திய குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்ய  திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி  திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், இந்த முறைகேட்டை சிபிஐக்கு மாற்ற கோரி திமுக அமைப்பு செயாலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

அதற்கு அனுமதி வழங்க வேண்டும். குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 63 பேர் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். இந்த முறைகேட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்.  முறைகேட்டை அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் பி.டி.பெருமாள், இந்த முறைகேட்டை விசாரித்து வந்த 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தற்போது 4வது விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். முறைகேட்டில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுகிறது. இந்த முறைகேட்டால் வருங்கால தமிழ்நாடே ஊழல் மிகுந்ததாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அனுமதியளித்து   விசாரணையை பிப் 28ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

Tags : TNPSC ,CBI ,DMK ,Group 1 ,Chennai High Court , DMK ,CBI ,TNPSC ,Group 1 scam case
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...