×

விடுமுறையை கொண்டாட பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வருகை

சென்னை: விடுமுறையை கொண்டாட பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் தேர்வு முடிந்து பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை 2 மாதம் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளாதல், அந்நாட்டு சுற்றுலாப் பயணிககள் தங்கள் குழந்தைகளுடன் மாமல்லபுரத்திற்கு வர தொடங்கியுள்ளனர்.  இதனால், மாமல்லபுரம் நகரம் களைகட்ட தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன், மாமல்லபுரம் சிற்பக் கலை கல்லூரியில் சிற்பக் கலைஞராக பணியாற்றி வந்த சீனிவாசன் என்பவரை கலையின் மேல் உள்ள ஆர்வத்தால் விரும்பி திருமணம் செய்து கொண்ட கேப்ரியல் என்ற பிரான்ஸ் பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வருடம் தோறும் பிரெஞ்சு விடுமுறையை கழிக்க மாமல்லபுரம் சுற்றுலா வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்து கேப்ரியல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் சிற்ப கலைஞரான சீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் தற்போது பாரிஸ் நகரில் வசித்து வருகிறோம். பலவிதமான சிற்பங்களை வடிவமைத்து கண்காட்சி கூடங்களிலும், பூங்காக்களிலும் நிறுவி தமிழக சிற்பக்கலைக்கு மெருகூட்டி கணவர் பெருமை சேர்த்து வருகிறார்.
பள்ளி விடுமுறையை கழிக்க பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம், பாண்டிச்சேரி, கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வருவார்கள். சீனாவிற்கு செல்லும் எங்கள் பிரான்ஸ் நாட்டினர் பலர் தற்போது அங்கு செல்வதை தவிர்த்து, இந்தியாவிற்கு சுற்றுலா வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சீனாவில், குளிர் சீசன் காலம் என்பதால் அந்த சீதோஷ்ண நிலை எங்கள் நாட்டினருக்கு ஒத்து வராது. குளிர் சீசன் காலங்களில் உடனடியாக கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளதால், பெரும்பாலான பிரெஞ்ச் பயணிகள் அங்கு செல்ல தயங்குகின்றனர்.  அதேபோல் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த பிறகு ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு செல்ல நிறைய பிரான்ஸ் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அங்கு பளிங்கு கல்லினால் கட்டப்பட்ட காதல் சின்னமான தாஜ்மஹாலை பிரான்ஸ் நாட்டினர் விரும்பி ரசிக்கும் ஒரு கலைச் சின்னமாக திகழ்கிறது. இவ்வாறு கூறினார். கேப்ரியல் தந்தையும் ஓய்வு பெற்ற பிரான்ஸ் ராணுவத் துறை அதிகாரியுமான புர்சுவாகி கூறுகையில், ‘இங்குள்ள கடற்கரை கோயில் எனக்கு பிடித்த முக்கிய கலைச் சின்னமாகும். பிரான்ஸ் நாட்டில் இந்தக் கடற்கரைக் கோயிலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இங்குள்ள புராதன சின்னங்களை உங்கள் அரசு முக்கியத்துவம் அளித்து பாதுகாக்க வேண்டும்.  இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சத்தில் இங்குள்ள புராதன சின்னங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, கண்களை வரும் வண்ணம் உள்ளது’ என்றார்.

Tags : France ,holiday ,Mamallapuram ,holiday tourists , celebrate ,holiday, Tourists, Mamallapuram
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!