கல்புர்கி: கர்நாடகாவின் அப்சல்புரா தாலுகா, பூசாகா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் துகாராம் பாட்டீல். பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்பிபிஎஸ் படித்து வந்த அவர் மகாலட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். கலால்துறை குத்தகைதாரராக இருந்த அசோக் குத்தேதார் என்பவரின் மனைவி பத்மாவதியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதுகுறித்து அசோக் குத்தேதாருக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்தார். தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்ததால் அசோக் குத்தேதாரை கடந்த 2002ம் ஆண்டு சுபாஷ் கொலை செய்தார். இக்கொலை வழக்கில், சுபாஷூக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, முதுகலை இதழியல் பட்டம் முடித்தார். கடந்த 2016 ஆகஸ்ட் 15ம் தேதி சிறை தண்டனை முடிந்து விடுதலையானார். பின்னர் தான் பாதியில் நிறுத்திய எம்பிபிஎஸ் படிப்பை தொடர அனுமதிகோரி ராஜிவ் காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
சுபாஷின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் மீதியுள்ள இரண்டாண்டுகள் முடிக்க அவர் அனுமதி வழங்கினார். அதன்படி, கல்புர்கியில் உள்ள கர்நாடக கல்வி குழுமத்தின் மகாதேவப்பா ரேவூரா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் சுபாஷ். தன்னை விட 18 ஆண்டுகள் குறைவான மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து எந்த கூச்சமுமில்லாமல் படித்து தேர்ச்சி பெற்றார். ரெகுலராக படிக்கும் மாணவர்கள் தேர்வில் அரியர் வைக்கும்போது, கடைசி இரண்டாண்டு தேர்வில் எந்த அரியரும் இன்றி சுபாஷ் தேர்ச்சி பெற்றது சாதனையாக கருதப்படுகிறது. கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2 நாட்களுக்கு முன் நடந்தது. இதில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்த சுபாஷ் பாட்டீல் பட்டம் பெற்றபோது, அரங்கத்தில் இருந்தவர்கள் கைகள் தட்டி ஆரவாரம் செய்தனர்.