புதுடெல்லி: ராணுவத்தில் அனைத்து பெண் அதிகாரிகளையும், நிரந்தர பணிக்கு அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு குறித்த செய்தியை இணைத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், `‘பெண்கள் ராணுவ உயரதிகாரிகளாக நிரந்தரமாக பணியாற்ற தகுதியற்றவர்கள், ஏனெனில் அவர்கள் ஆண்களை விட வலிமை குறைந்தவர்கள் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இதன் மூலம் பெண்களை, மத்தியில் ஆளும் பாஜ அரசு அவமதித்து விட்டது’’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் பிரியங்கா காந்தி நேற்று கூறுகையில், ‘‘வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பெண்களுக்கு புதிய இறக்கை முளைத்துள்ளது. நீர், நிலம், ஆகாயம் என பல துறைகளிலும் பெண்கள் திறமையாக பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் ராணுவத்திலும் அவர்கள் வலிமையானவர்கள் என்பதை, மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு மூலம் பதிலடி கொடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.