×

அனகாபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் மேற்கூரை, இருக்கை வசதியின்றி பயணிகள், மாணவிகள் தவிப்பு

பல்லாவரம்: அனகாபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் மேற்கூரை, இருக்கை வசதி இல்லாததால் மாணவர்கள், பயணிகள் தவிக்கின்றனர். சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் அரசுப் பள்ளி அருகே அம்பேத்கர் சிலை பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் காத்துக்கிடந்து பஸ் ஏறுகின்றனர்.வெயில் கொடுமை தாங்கமுடியாமல் வயதானவர்கள் தவிக்கின்றனர். சில நேரம் மயங்கி விழுந்து விடுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; அனகாபுத்தூர் அம்பேத்கர் சிலை பஸ் ஸ்டாப்பில் அடிப்படை வசதி எதுவும் கிடையாது.

மேற்கூரை, இருக்கைகள் இல்லாததால் கால்கடுக்க வீதியில் நிற்கவேண்டிய அவலநிலையில்தான் உள்ளோம். நோயாளிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது வெயில் ஆரம்பித்துள்ளதால் ஒதுங்குவதற்குகூட இடமின்றி தவிக்கிறோம். அனகாபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்துவரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், இந்த பஸ் ஸ்டாப்பைத்தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேற்கூரை வசதியில்லாததால் மாணவர்கள் வெயில், மழையில் தவிக்கின்றனர்.

தவித்த வாய்க்கு தண்ணீர்கூட கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பஸ் ஏறுவதற்காக நடுரோட்டில் நிற்கும்போது வாகனங்கள் மோதி மாணவர்கள் விபத்தில் சிக்குகின்ற ஆபத்தும் உள்ளது. எனவே, அனகாபுத்தூர் பஸ் ஸ்டாப்பில் மேற்கூரை அமைத்து பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்துதரவேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Travelers ,bus stop ,Anakaputhur , Anakaputhur, Bus Stop
× RELATED கூடுதல் சாம்பார் கேட்டு தாக்குதல்: ஓட்டல் ஊழியர் பலி