நாகர்கோவில்: மார்த்தாண்டம், திருவட்டாரில் கோயில் மற்றும் மளிகை கடையில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியில் சடையபுரம் ஸ்ரீமகாதேவர் கோயில் உள்ளது. இங்கு சிவன், பிள்ளையார், நாகர் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. கோயிலில் காலை, மாலை என்று இரண்டு வேளை பூஜைகள் நடந்து வருகின்றன. கோயிலில் காம்பவுண்ட் சுவருடன் ஒட்டி வெளியே உண்டியல் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பூஜை செய்ய பூசாரி வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் விரைந்து வந்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வந்து கடப்பாறையால் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது. சம்பவம் குறித்து கோயில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் திருவட்டாரை அடுத்த சாணிவிளை பகுதியை சேர்ந்தவர் கோபாலன் (55). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் மகன் நேற்று வெளிநாட்டில் இருந்து வந்ததால் அவரை அழைத்து வர அதிகாலை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் மளிகை கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக அந்த பகுதி மக்கள் கோபாலனுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து திருவட்டார் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முதற்கட்டமாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ரூ.2 லட்சம் தப்பியது
கொள்ளை நடந்த மளிகை கடை உரிமையாளர் கோபாலன் சொந்த வீடு கட்டும் பணிக்காக ரூ.2 லட்சத்தை கடையில் மறைவான இடத்தில் வைத்திருந்தார். இந்நிலையில் கடையில் நுழைந்த திருடன் மேஜையில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடியுள்ளார். ஆனால் இந்த ரூ.2 லட்சம் மறைவான இடத்தில் இருந்ததால் தப்பியது.