மதுரை: ஜெயலலிதாவை விட எடப்பாடிதான் பல திட்டங்களை செய்து வருகிறார் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.மதுரையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ரஜினி மீது அரசியல்ரீதியில் இப்போதே விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ரஜினி ஒரு போதும் கட்சி துவங்க மாட்டார். இஸ்லாமியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. போலீசார் அரசு பிரதிநிதியாக போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். குடியுரிமை சட்டம் குறித்து தெரிந்தவர்கள் அமைதியாக உள்ளனர். தெரியாதவர்கள் தான் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா இல்லாத குறையை நீக்கி, மக்களுக்கான திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். ஜெயலலிதாவை விட எடப்பாடியார் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை இருந்தும் அட்சயபாத்திரம் போல் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.