சென்னை : ரயிலில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின்படி, காவல் துறை தலைவர் வனிதாவின் மேற்பார்வையில் சென்னை காவல் காண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் திருச்சி காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் காவல் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
இதன்படி கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தன்டனை கிடைத்துள்ளது. 55 வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 19 வழக்குகளில் விசாரணை நடைபெற்றுவருகிறது. பயணிகள் 1512 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றும், தகவல்களை 9962500500 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.என்று தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.