சென்னை: மெட்ரோ ரயில்களில் ஸ்மார்ட் மற்றும் கையடக்க மிதிவண்டியை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் உள்ளது. இதற்கென தனியாக கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கையடக்க மிதிவண்டிகள் அதாவது குழந்தைகளுக்கான மிதிவண்டி மற்றும் ஸ்மார்ட் மிதிவண்டிகளை மெட்ரோ ரயில்களில் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
பயணிகளின் இந்த கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுக்குள் பயணிகள் தங்கள் சிறிய வகை ஸ்மார்ட் மற்றும் கையடக்க மிதிவண்டிகளை மட்டும் எடுத்துச்செல்ல மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இவ்வாறு கூறினார்.