×

அருகும் மகப்பேறு பாக்கியத்தால் பெருகும் கருத்தரிப்பு மையங்கள்

* தாய்மையை சிதைக்கும் ‘பாஸ்ட் புட்’ உணவுகள்
* போதை வஸ்துகளால் வீரியம் இழக்கும் ஆண்மை

குழல் இனிது...யாழ் இனிது... என்போர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்,’  என்று தித்திக்கும் வரிகளால் தேன் ஊட்டுகிறது வள்ளுவம். இயந்திரம் போல் வாழ்க்கை சுழன்று கொண்டிருந்தால், இல்லங்களில் மழலை மொழி கேட்பதற்கு இருக்காது சாத்தியம். செயற்கையை சிலாகித்து, மனித குலம் பரபரத்து கிடப்பதே இதற்கு காரணம். இயற்கையை சுவாசித்து பயணித்தால் மட்டுமே எதிர்கால விதைகள் வீரியமாகும் என்பது நிதர்சனம்,’’ என்கின்றனர் மானுடவியல் ஆர்வலர்கள். தமிழகத்தில் கடந்த 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தப்பக்கம் திரும்பினாலும் குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தும் ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற விழிப்புணர்வு பாதாகைகளும், சுவர் விளம்பரங்களும் கண்ணில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அதற்கு பிறகு ‘நாம் ஒருவர், நமக்கு ஒருவர்’ என்ற வாசகம் பிரபலமானது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற வாசகங்கள் நம் கண்ணில் படவில்லை என்றால் அதுவும் மிகையல்ல. அதே நேரத்தில் தற்போது திரும்பும் திசையெல்லாம் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் குறித்த விளம்பர போர்டுகளும், அவற்றின் சிறப்பம்சம் குறித்த வாசகங்களும் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. விதம் விதமான பேக்கேஜ் முறை, தவணை முறை என்று சலுகைகளை அறிவித்து, வருவாய் ஈட்டுவதில் கொடிகட்டி பறக்கும் தொழிலாக இது உருவெடுத்து வருகிறது.

பெருநகரங்களில் மருத்துவ மனைகளுக்கு இணையாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம். இயற்கையான கருத்தரிப்பு குறைந்து வருவதும், திருமணமான ஓராண்டுக்குள்  கருத்தரித்து விட வேண்டும் என்ற அவசரமுமே இதற்கான முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். தற்போதைய ஆய்வுகளின் படி கருத்தரிப்புக்கு பெரும் தடையாக இருப்பது உடல் பருமன். முன்பெல்லாம் திருமண வயதின் போது பெண்கள் 45 முதல் 50 கிலோ எடையில்தான் இருப்பார்கள். தற்போது 60 முதல் 80 கிலோ எடையில் இருப்பவர்களே அதிகளவில் உள்ளனர். இந்த உடல் பருமன் காரணமாக சினைப்பை நீர் கட்டி பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இதை விட முக்கியமாக கருப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பல பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது என்பது மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல். இதே போல் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயால் கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கருச்சிதைவு, குறைபிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.

பெண்களை பொறுத்தவரை மாறிவிட்ட உணவுப் பழக்கம், உடல் பருமனுக்கும், அதன் எதிரொலியாக நிகழும் கருத்தரிப்பு பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. ஆண்களை பொறுத்தவரை மதுப்பழக்கம், புகைப்பழக்கம், நவீன போதை வஸ்துகளுக்கு அடிமையாகுதல் போன்றவற்றால் உயிரணுக்களின் எண்ணிக்கையும், அதன் வீரியமும் நாளுக்கு நாள் குறைகிறது. இது திருமணம் முடிந்தவுடன் மனைவியை தாயாக்கும் தகுதிக்கு உலை வைக்கிறது. மகப்பேறு பிரச்னைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஒரு பங்கு ஆண்களும், மற்றொரு பங்கு இருவருமே சரிபாதியாகவும் இருக்கின்றனர் என்பது அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களின் ஆதங்கம்.  

காலம் தாழ்த்தி திருமணம் செய்வது கூட கருத்தரிப்புக்கும், மகப்பேறு இன்மைக்கும் காரணமாக அமைகிறது. எனவே பெண்கள் 20 முதல் 25 வயதுக்குள்ளும், ஆண்கள் 30 வயதுக்குள்ளும் திருமணம் செய்வதும் அவசியம் என்கின்றனர் அவர்கள். திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ண ஓட்டம் மாற வேண்டும். திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையில்லாத தம்பதிகளுக்கு கருத்தரிப்பு மையங்கள் என்பது ஒரு வரப்பிரசாதம்தான். அதே நேரத்தில் உரிய வயதில் திருமணமான தம்பதிகள், குழந்தைக்காக 3 ஆண்டுகள் வரை காத்திருக்கலாம்.

ஆனால் ஒரு ஆண்டிலேயே குழந்தை பிறக்காவிட்டால், தங்களுக்கு ஏதோ  பெரிய குறை இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். உடனடியாக அவர்களின் கவனம், கருத்தரிப்பு மையங்களின் பக்கம் திரும்புகிறது. இதுதான் கருத்தரிப்பு மையங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். இப்படி லட்சங்களை வாரி இறைத்து வார்க்கப்படும் குழந்தைகளின் ஆரோக்கியம், அறிவாற்றல் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. எனவே செயற்கையை வாசித்து தடம் மாறும்  மனிதகுலம், இயற்கையை சுவாசித்து பயணிப்பது மட்டுமே  தொடரப்போகும் பெரும் அபாயங்களுக்கு தீர்வாகும் என்பது மனிதவியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றாக உள்ளது.

* ஆண்களுக்கான சில அறிவுரைகள்
ஆண்களை பொறுத்தவரை அதிக நேரம் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். லேப்டாப்பை உடம்பில் ஒட்டி வைத்து பயன்படுத்துவதை தவிர்த்து, டேபிள் மீது வைத்து பயன்படுத்த வேண்டும். மது மற்றும் புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதிக நேரம் கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். மிகவும் சூடான  உணவு பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் உயிரணுக்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

* வயது கடந்து மணமாகும் பெண்களுக்கு சிரமங்கள்
பெண்களுக்கு 20 முதல் 25 வயதுக்குள் திருமணம் என்பது மிகவும் அவசியம். 30 வயதிற்கு மேல் திருமணமாகும் பெண்களுக்கு சினை முட்டையில் கட்டிகள் உண்டாவதால் கருத்தரித்தலில் தாமதம் ஏற்படலாம். கருவுற்ற பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மூளை வளர்ச்சி குன்றியும், பிறவி குறைபாடுடனும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரையால் தாய்க்கும், சேய்க்கும் பிரச்னைகள் அதிகம். சுக பிரசவத்திற்கான வாய்ப்பு குறைந்து, அறுவை சிகிச்சையே பிரதானமாகும். தாய்ப்பால் சுரப்பதும் குறைவாக இருக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

* உயிரணுக்களின் வீரியம் குறைக்கும் சிகரெட், மது
சிகரெட் பிடிக்கும்போது அதில் உள்ள நச்சுக்கள் ஆண்கள், பெண்கள் இருபாலரின் பாலுறுப்புகளையும் பாதிக்கின்றன. ஆண்களுக்கு உயிரணுவின் வீரியத்தை சிகரெட் குறைத்துவிடுகிறது. உயிரணுவின் எண்ணிக்கை குறைவதற்கும், உயிரணுவின் இயக்கம் உடலில் சுணங்கிப் போவதற்கும் சிகரெட்டில் இருக்கும்  நிகோட்டின் முதலான நச்சுக்கள் முக்கிய காரணம். சிகரெட் பிடிப்பதால் உயிரணுவின் அமைப்பியல் மாறிவிடுவதால் கரு உருவாகும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. இதே போல் மதுவில் கலந்துள்ள ஆல்கஹாலும் உயிரணுக்களின் உற்பத்திக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

* மையங்களில் முதலீடு செய்யும் கார்ப்பரேட்டுகள்
உலக மயமாக்கலுக்கு பிறகான வாழ்வியல் முறை மாற்றங்கள் காரணமாக, மக்களிடம் கருத்தரிப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தொழில் அதிபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட கருத்தரிப்பு மையங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆடித்தள்ளுபடியில் துணி விற்பதைப் போல சில கருத்தரிப்பு மையங்கள் குழந்தை பெற சிறப்பு பரிசு அறிவிக்கும் விளம்பரங்கள் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* ஆரம்ப கட்டத்திற்கு ரூ.50,000 வசூல்
ஒரு சில கருத்தரிப்பு மையங்களில் சமீப காலமாக மோசடிகளும் அதிகரித்து விட்டது. இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், இந்த மையங்களுக்கு சென்றால் அவர்களுக்குரிய ஆலோசனைகள் வழங்குவதில்லை. அதோடு பல உண்மைகளை மறைத்து, அவர்களை செயற்கையாக கருத்தரிக்க வைக்கின்றனர். கருத்தரிப்பு சிகிச்சைக்கு ஆரம்ப கட்டணமாக குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரம் வாங்குகின்றனர் என்பதும் மருத்துவ ஆர்வலர்கள் வெளியிடும் அதிர்ச்சி தகவல்.

* பிரச்னையை தவிர்க்க இருபாலருக்கான வழிகள்...
1சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும்
2 நன்றாக
உறங்க வேண்டும்
3காய்கறிகள், கீரைகள், பழங்கள்  போன்ற  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளைச் சாப்பிடவேண்டும்.
4மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
5சிகரெட், மதுப்பழக்கத்துக்குத் தடை போட வேண்டும்.
6நல்ல சுற்றுப்புறச்சூழலை உருவாக்க முயற்சி செய்யவேண்டும்.
7பாஸ்ட் புட் முதலான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
8பிறப்பு உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
9தேவையற்ற பயமோ, பதற்றமோ நிச்சயம் வேண்டாம். எந்த சந்தேகம் இருந்தாலும் ரகசியமாக தவறான தீர்வை நாடாமல், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

* விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க இதுவே காரணம்
இந்தியாவில் குழந்தையின்மை பிரச்னையால் சுமார் 2.75 கோடி தம்பதிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் குழந்தையின்மையால் தவிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை, தற்போது குடும்ப மற்றும் சமுதாயப் பிரச்னையாக மாறி விவாகரத்து வரை சென்று விடுகிறது. நீதிமன்றத்துக்கு வரும் விவாகரத்து வழக்குகளில், கணிசமானவை குழந்தையின்மை பிரச்னை வழக்குகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

* அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்தும் பயனில்லை
செயற்கை கருத்தரிப்பு என்றாலே தனியார் மையங்களுக்கானது. அது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற எண்ணமும் இங்கு பரவலாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மையங்களை நாடி வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இது குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு அவசியம் என்கின்றனர் குடும்ப நலத்துறை அதிகாரிகள்.

* 5 ஆண்டுகளில் செலவு ரூ.5ஆயிரம் கோடியாகும்
நகர்ப்புறங்களில் 20 சதவீத குடும்பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் 2017ம் ஆண்டு குழந்தையின்மை சிகிச்சைக்காக மருந்து, கட்டணம் என ரூ.1,831 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை  2023ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடியை தாண்டும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின்மை சிகிச்சை மையங்கள், கோடிக்கணக்கில் பணம் புரளும் சந்தையாக மாறி வருகிறது. இதில் போலி மருத்துவர்களும் ஏராளமாக ஊடுருவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

* நம்பிக்கை என்ற பெயரில் தொடரும் மூட நம்பிக்கை
ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட சிலர், இந்த நாளில், இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இதற்காக கருத்தரிப்பு மையங்களை நாடிச்சென்று  வரைமுறை இல்லாமல் பல லட்சங்களை இழக்கின்றனர் என்பது மிகவும் வேதனையான விஷயம்.

Tags : wardrobe centers , Near, maternity privilege, mounting contraception, centers
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...