பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள், கடைகளின் முன்பு பைக்குகள் நிறுத்தப்படுவதாலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதாலும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இவற்றை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில், திருவிக நகர் 6வது மண்டல அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்திருந்த பைக்குகள், சிறு கடைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினர். மீண்டும் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.