குன்னூர்: குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் காட்சி முனையில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் வனத்துறைக்கும், ஊராட்சிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் வனப்பகுதியை ஒட்டிய டால்பின் ேநாஸ் காட்சிமுனை, அனைத்து சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் இப்பகுதிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வனப்பகுதி வழியாக சென்று காட்சி முனையை ரசித்து வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து டால்பின் நோஸ் காட்சி முனை 5 ஆயிரத்து 536 அடி உயரமும் கொண்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சமவெளி பகுதிகளும், மலைரயில் ஊர்ந்து வருவதும், ஆதிவாசி குடியிருப்புகளும், காண முடியம் இது சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. சமீபகாலமாக பர்லியார் ஊராட்சி சார்பில் இங்கு சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள், தங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வழங்காததால் காப்பு காட்டு பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இதனால் நேற்று முதல் டால்பின் நோஸ் காட்சி முனைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் இல்லாமல் காட்சி முனை வெறிச்சோடி காணப்படுகிறது. பர்லியார் ஊராட்சி மற்றும் வனத்துறை இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக, சுற்றுலா மையத்தை நம்பி உள்ள வியாபாரிகள் மட்டுமில்லாமல், சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி விரைவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.