சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் உயிரிழந்தவர் உடலுடன் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போலீசார் தடியடி நடத்தியபோது முதியவர் உயிரிழந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இன்று 2-வது நாளாக முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து லேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கல்வீச்சில் போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஆயுதப்படை பெண் போலீசார் கலா, உதயகுமாரி ஆகியோர் காயம் அடைந்தனர். இணை கமிஷனர் தவிர மற்ற 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று போராட்டத்தின் போது முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என கூறி அவரது உடலுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.