கடத்தூர்: வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர், குடும்பத்துடன் தர்மபுரி- அரூர் சாலையில் முகாமிட்டு, அரிவாள், வெட்டு கத்தி, கோடாரி, கடப்பாரை உள்ளிட்ட இரும்பு கருவிகளை தயாரித்து, அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப இரும்பு கருவிகளை தயாரித்து கொடுக்கின்றனர். இதனால் கடத்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து வடமாநிலத்தவர் செய்து கொடுக்கும் இரும்பு கருவிகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவாட் மாவட்டம் மனோர்தானா கிராமத்தை சேர்ந்த நாங்கள், அங்கு வேலைவாய்ப்பு குறைந்து விட்டதால், தமிழகத்தில் ஊர் ஊராக சென்று விவசாய கருவிகளை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.
விவசாய கருவிகள் புழக்கத்தில் குறைந்து, இயந்திரங்களின் வருகை அதிகரித்து விட்டது. மேலும் விளைச்சல் நிலங்களும் குறைந்து போனதால், இரும்பினால் ஆன விவசாய கருவிகளை யாரும் வாங்குவது இல்லை. தேவையான மூலப்பொருட்களை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகளிடம் வாங்கி வந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். இங்கு வியாபாரம் குறைந்ததும், மாற்று இடத்துக்கு சென்று விடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விவசாய கருவிகள் ஆரம்பத்தில் தரமாக தெரிந்தாலும், நாளடைவில் உடைந்து விரிசல் ஏற்படுகிறது. இந்த கருவிகள் பழுதடைந்தால் அதை சரி செய்து கொடுக்க உள்ளூர் தொழிலாளர்கள் முன்வருவதில்லை என்றனர்.